கஸாப்புக்கு ஆதரவாக குரல்-வக்கீல் வீடு சூறை
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கஸாப்புக்கு ஆதரவாக வாதாடத் தயார் என அறிவித்த வக்கீல் வீட்டை சிவசேனா கட்சியினர் சூறையாடினர். வக்கீலுக்கும் அடி விழுந்தது.
கஸாப்புக்கு ஆதரவாக எந்த வக்கீலும் ஆஜராகக் கூடாது என்று பாம்பே மாஜிஸ்திரேட் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆனால் குற்றவாளியாக இருந்தாலும் கூட அவருக்கும் வாதாட உரிமை உண்டு. வக்கீல் வைத்துக் கொள்ள சட்டத்தில் இடம் உண்டு. கஸாப்புக்காக வாதாட நான் தயார். ஆனால் பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டால் மட்டுமே வாதாடுவேன் என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனறல் ஜனார்த்தன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கஸாப்புக்காக வாதாடுவேன் என்று அறிவித்த வழக்கறிஞர் ஒருவரின் வீட்டை சிவசேனா கட்சியினர் சூறையாடி, வக்கீலையும் தாக்கியுள்ளனர்.
ஏற்கனவே திணேஷ் மோட்டா, அசோக் சரோகி ஆகிய இரு வக்கீல்களும் கஸாப்புக்காக வாதாட முன்வந்தனர். ஆனால் சிவசேனாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர்கள் பின்வாங்கி விட்டனர்.
இந்த நிலையில் தான் வாதாடத் தயார் என அறிவித்தார் மகேஷ் தேஷ்முக். தனது உதவியாளரை மும்பை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அனுப்பிய அவர், கஸாப்புக்காக வாதாட தான் தயார் என நீதிபதியிடம் தெரிவித்தார். கஸாப்பை சந்திக்க தனக்கு அனுமதி தர வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இதையடுத்து மகேஷ் தேஷ்முக் வீட்டை நேற்று சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.
விஜய் காலனி பகுதியில் தேஷ்முக்கின் வீடு உள்ளது. இதே பகுதியில் அவரது அலுவலகமும் உள்ளது. நேற்று இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சேனா தொண்டர்கள் வந்தனர்.
அலுவலகத்தையும், வீட்டையும் அவர்கள் தாக்கி சூறையாடினர். அலுவலகத்தில் இருந்த பர்னிச்சர்கள், தொலைபேசி உள்ளிட்டவற்றை அடித்து உடைத்தனர். சட்ட நூல்களை தூக்கி வெளியே வீசினர். பல ஆவணங்களையும் தூக்கி வெளியே வீசி எறிந்தனர்.
மேலும், வக்கீல் வீட்டில் வாடகைக்கு வசித்து வருவோரின் இரு டூவிலர்களையும் அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
அப்போது அலுவலகத்தில் இருந்த தேஷ்முக்கும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டுக்குக் காவலாக இருந்த இரண்டு போலீஸாரும் தாக்கப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய சிவசேனா தொண்டர்கள் மாவட்ட கோர்ட்டுக்குப் போய் அங்கு தேஷ்முக்குக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அமராவதி வக்கீல்கள் சங்க நிர்வாகிகளை சந்திதது, கஸாப்புக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என்று கோரி மனு அளித்தனர். மேலும், தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தன் வீடு, அலுவலகம் மீதான தாக்குதல் குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் தேஷ்முக்.