அதிமுக கூட்டணி இருந்தாலும் சிறுதாவூர் பிரச்சனையில் உறுதி-சிபிஎம்
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைந்தாலும் சிறுதாவூர் நில பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி தலித் மக்களுக்காக போராட உறுதியாக இருக்கிறது என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்க்கையில்,
பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளை தோற்கடிப்பது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளை நிராகரிப்பது என்று மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் எடுத்த அரசியல் முடிவை தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுத்த முற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் மக்களவை தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்திப்பது என்று தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.
இதில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளன. இது எங்கள் கட்சிகளுக்கு உள்ள உரிமை என்று அங்கீகரிக்கிற சகிப்புதன்மை திமுக தலைமைக்கு இல்லாமல் போனது துரதிஷ்டமே.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான விமர்சனங்களை, ஏகடியங்களை திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
சிறுதாவூர் பிரச்சனையை (தலித் நிலங்களை சசி அண்ட் கோ அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரச்சனை) பாதிக்கப்பட்ட தலித் மக்கள் எங்கள் கட்சியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது, மக்கள் பிரச்சினையில் தலையிடும் எங்களது வழியில் நாங்கள் கடமை ஆற்றினோம். முதல்வரின் கவனத்தை ஈர்க்கக் கடிதம் எழுதினோம். இப்பிரச்சினையில் நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை திமுக அரசு நியமித்தது.
அந்த விசாரணை குழுவின் முன்பாக இந்த ஆண்டு ஜூன் 16, ஜூலை 3 ஆகிய 2 நாட்களில் கட்சியின் சார்பாக நானே நேரில் சென்று சாட்சியம் அளித்துள்ளேன். இன்றும் விசாரணை கமிஷனின் அறிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர் நோக்கி நிற்கிறது.
இந்தப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி இதுபோன்ற மக்கள் பிரச்சினையில் தொடர்ந்து தலையிட்டு வந்த நேர்வுகள் ஏராளம், ஏராளம்.
சிறுதாவூர் மட்டுமல்ல; நெல்லை மாவட்டம் நாங்குநேரி காரங்காடு பகுதி, திருச்சி அடுத்த கும்பக்குடி கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேலையை தமிழக அரசு செய்தால் நல்லது. ஆனால், அரசியல் அணி மாற்றம் குறித்த ஏகடியத்திற்கு மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு சும்மா இருப்பது ஆட்சிக்கு அழகல்ல.
மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் உறவுகளுக்காக அவற்றை கைவிட்டதோ, சந்தர்ப்பவாத நிலை எடுத்து சமரசம் செய்து கொண்டதோ என்றுமில்லை!.
இவ்வாறு என்.வரதராஜன் கூறியுள்ளார்.