நெல்லை மாநகராட்சி வளாகத்தில் 47 பாம்புகள் பிடிபட்டன
நெல்லை: நெல்லை மாநகராட்சி வாளகத்தில் நேற்று மூன்று மணி நேரம் போராடி 47 பாம்புகளை பாம்பாட்டிகள் பிடித்தனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் வயல் வெளிகளாகும். இதனால் அந்த பகுதியிலிருந்து பாம்புகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு அடிக்கடி வந்தன.
பாம்பை கண்டால் படையும் நடங்கும் என்பதற்கு ஏற்ப பாம்புகளை கண்ட மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மக்கள் என அனைத்து தரப்பினரும் பீதியுடன் பணியாற்றி வந்தனர்.
இதையடுத்து பாம்புகளை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்காக பேட்டை பகுதியை சேர்ந்த பாம்பாட்டி மாரியப்பன் தலைமையில் 5 பேர் மாநகராட்சி வாளகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 5 பேரும் மகுடியை வாசிக்க பாம்புகள் படையெடுத்து வரத் தொடங்கின. இதில் சில பாம்புகள் படமெடுத்து ஆடின.
தகவல் பரவியதும் அங்கு ஏராளமானோர் கூடினர். மகுடியின் இசையில் மயங்கிய பாம்புகளை மிக சர்வசாதாரணமாக பாம்பாட்டிகள் பிடித்தனர். இதனை மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்தனர்.
பூங்கா, வாகன நிறுத்துமிடம், குடோன், கழிப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நல்லபாம்பு, சாரைபாம்பு, மஞ்சள்சாரை, கட்டுவிரியன் என 47 பாம்புகளை பிடித்தனர். இந்த பாம்புகள் 10 அடி வரை நீளம் இருந்தன.












Click it and Unblock the Notifications