ஜனவரி முதல் ரயில்வேக்கு தனி வெடிகுண்டு கண்டுபிடிக்கும் படை
நெல்லை: ஜனவரி மாதம் முதல் ரயில்வேக்கு என தனி வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் சிறப்புப் படைப் பிரிவு உருவாக்கப்படவுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மும்பையில் பயணிகள் நெருக்கடி மிகுந்த சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடிதனமாக சுட்டனர். வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிசூடு சம்பவங்களில் 200 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் தனியாக வெடிகுண்டு நிபுணர் குழுவை ஏற்படுத்த ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.
மேலும் கமண்டோ பாதுகாப்பு உள்பட பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.
வருகிற ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகை தர உள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.