நள்ளிரவு பிரார்த்தனைக்கு போனவர் வீட்டில் கொள்ளை
நெல்லை: பாளையங்கோட்டையில், நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரர்த்தனைக்கு சென்றவரின் வீட்டை உடைத்து ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
நெல்லை மாநகரில் கடைகள் மற்றும், வீடுகளின் பூட்டை உடைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. நேற்று முன்தினம் பாளை அருகே டாக்கரம்மாள்புரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மதபோதகர் விக்டர் இம்மானுவேல் ராஜின் வீட்டு கதவை உடைத்து 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி ஊழியர் டேனியல் வீட்டிலும் கதவை உடைத்து 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. ஓரே நாள் இரவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இன்னொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
பாளை ரகுமத் நகரை சேர்ந்த எட்வர்ட் மகன் பவுல். இவர் பாளையில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார்.. நேற்றிரவு 11 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் அங்குள்ள சர்சில் கிறிஸ்துமஸ் பிரர்த்தனைக்கு சென்றார். நள்ளிரவு 1 மணி அளவில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் பின்புறம் இருந்த கிரில் கேட்டும், அங்கிருந்த மற்றொரு கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 38 பவுன் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. வீட்டுக்கருகே இருந்த அவரது கடையும் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரில் மீண்டும் தலைதூக்கியுள்ள தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications