திருமங்கலத்தில் சாமியாருடன் பன்னீர் ஆலோசனை
மதுரை: திருமங்கலம் தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழுத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், திருமங்கலத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில், சாமியார் ஒருவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது சாமியாரின் இளம் சீடரும் உடன் இருந்தார்.
திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் அ.தி.மு.க., தலைமை தேர்தல் அலுவலகம் உள்ளது. நேற்று காலை பன்னீர்செல்வம், மதுரை மாநகர அதிமுக முன்னாள் நகர செயலாளர் ராஜன்செல்லப்பா உட்பட நிர்வாகிகள் தேர்தல் அலுவலகம் வந்தனர். அங்கு நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவரை நிர்வாகிகள் சிலர் தேர்தல் அலுவலகத்தில் இருக்கும் தனி அறைக்குள் பன்னீர் செல்வத்தை அழைத்து சென்றனர். அங்கு ஏற்கனவே சாமியார் ஒருவரும், அவரது இளம் வயது சீடரும் இருந்தனர். அவர்களிடம் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அவருடன் ராஜன்செல்லப்பா மட்டும் இருந்தார். மற்ற யாரும் உள்ளே செல்லவில்லை.
பின்னர் வெளியே வந்த பன்னீர் செல்வத்திடம் சாமியார், சீடர் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் பதில் ஏதும் அளிக்காமல் சிரித்தபடி சென்று விட்டார்.
சோழவந்தான் சாமியார்:
ஆனால் அந்த சாமியார் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
சோழவந்தான், தென்கரை அருகே உள்ள ஊத்துக்குளி நாராயணபுரம் சர்வேஸ்வரர், ராகு, கேது, சனீஸ்வரர் கோயில் சிவகாளி நாராயண சித்தர் ஆதீனம்தான் அந்த சாமியார் என்றும், அவருடன் வந்தவர் சீடர் என்றும் தெரிய வந்துள்ளது.
லதா வெற்றி உறுதி - காங்:
இதற்கிடையே, திமுக வேட்பாளர் லதா அதியமானின் வெற்றி உறுதி என காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுத் தலைவரும், எம்.பியுமான என்.எஸ்.வி.சித்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவில் எம்.பி.,க்கள் ஞானதேசிகன், கார்வேந்தன், ஆரூண், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., காங்., மாவட்ட தலைவர் தேவராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்மாள், ஸ்டேட்ட வங்கி இயக்குனர் விஸ்வநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
எம்.பி., தொகுதி நிதியில் இருந்து திருமங்கலம் தொகுதிக்கு மட்டும் இரண்டு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி, கல்லூரி, சமூதாயக்கூட கட்டடங்கள், நிழற்குடை, உயர்மின் கோபுர விளக்கு போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசின் ஆதரவு
பெற்ற ஒரே வேட்பாளர் லதா அதியமான் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications