'புலி ஆதரவு'-நடவடிக்கை கோரும் எஸ்ஆர்பி
சென்னை: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோர் மீது தமிழக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் இருப்பதுபோல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி மாநிலம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் 1987ம் ஆண்டு எட்டப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தது.
ஆனால் விடுதலைப் புலிகளால் அந்த நோக்கம் சிதைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த உடன்பாட்டின் சிற்பியான தலைவர் ராஜீவ் காந்தியின் உயிர் விடுதலைப் புலிகளால் தமிழக மண்ணிலேயே பறிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு அவர்கள் மீது இந்திய அரசு தடை விதித்தது.
அதன் பிறகும் புலிகளுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இவர்கள் முன்வைக்கும் தமிழீழ ஆதரவு கோரிக்கை பிரிவினைவாதத்தை நோக்கமாக கொண்டு அமைந்திருக்கிறது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் வழியில் சென்று கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுப்பதால் காங்கிரஸ் கட்சியின் மீது ஆத்திரமும், கோபமும் கொப்பளிக்கின்றன. அதன் விளைவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஊழியர்கள் தாக்கப்படும் நிலை உருவானது.
தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்துவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிடிவாதமாக உள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று முழக்கமிடுகிறார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் போன்றவர்களும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.
சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இவர்கள் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டு வருகிறார்கள். எனவே இவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பது தமிழக அரசுக்கு தவிர்க்க முடியாத கடமையாகும்.
எனவேதான், இவர்கள் மீது தமிழக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வியும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு எதிராக இருப்பவர்களுக்கு பல அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் விரைந்து நடவடிக்கைகளில் இறங்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications