முதல்வர் பதவியை ஏற்க உமர் தயார் - பரூக் அப்துல்லா
ஸ்ரீநகர்: புதிய முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் உமர் அப்துல்லா முதல்வர் பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறார் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் காப்பாளரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவரே வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்கட்சியின் தலைவரான உமர் அப்துல்லா முதல்வராகும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து அக்கட்சியின் காப்பாளரான பரூக் அப்துல்லா கூறுகையில், தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி முடிவான பின்னர்தான் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியும்.
இப்போதை முதல்வர் யார் என்பதை கூற முடியாது. இதுவரை கூட்டணி தொடர்பாக காங்கிரஸுடன் பேச்சு எதுவும் நடைபெறவில்லை.
கூட்டணி முடிவான பின்னர் இரு கட்சிகளும் சேர்ந்து முதல்வர் யார் என்பதை விவாதித்து முடிவு செய்வார்கள் என்றார்.
உமர் அப்துல்லா முதல்வர் பதவியை ஏற்பாரா என்று கேட்டபோது, ஏன் ஆகக் கூடாது? உமர் துடிப்பான இளைஞர். மக்களுக்கு சேவை செய்ய அவர் காத்திருக்கிறார் என்றார் பரூக்.
உங்களுக்கும், உமர் அப்துல்லாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறதே என்ற இன்னொரு கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை. அவருக்காக நான் பிரசாரம் செய்ய வேண்டும், ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என எனக்குத் தெரியும்.
உமர்தான் கட்சியின் தலைவர். எனக்கு வேறு இடங்களுக்குப் போகும் பொறுப்பை அவர் கொடுத்துள்ளார். எனக்கும், எனது மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றார் பரூக்.
காங்கிரஸுடன் கூட்டணி - உமர்
முன்னதாக உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊசலாடும் சட்டசபை அமையாது என நம்புகிறேன். இருப்பினும் முழு முடிவுகளும் வந்த பிறகுதான் அதுகுறித்து கூற முடியும்.
ஒரு வேளை பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியை அணுகுவோம். அவர்களுடன் இணைந்து அரசமைக்க நாங்கள் தயார்.
அதேசமயம் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். கடந்த முறை, அவர்கள் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்தனர்.
ஆனால் அதனால் பலனடைந்தது மக்கள் ஜனநாயகக் கட்சிதான். அதேபோல, காங்கிரஸ் கட்சியால் பாஜகவும் பலனடைந்துள்ளது. ஜம்முவில் கிடைத்துள்ள முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றன.
ஜம்மு காஷ்மீர் மக்கள் கூட்டணி ஆட்சிக்கே ஆதரவு தெரிவித்திருந்தால், நிச்சயம் அது தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி அரசை மனதில் கொண்டுதான் இருக்கும். இரு கட்சிகளும் சிறு சிறு காரணங்களுக்காக மக்கள் நலனை காவு கொடுக்காது என்று ஜம்மு காஷ்மீர் மக்கள் நினைக்கின்றனர்.
காஷ்மீரைப் பிரிக்க வேண்டும் என்ற மன நிலையில் உள்ள எந்தக் கட்சியுடனும் நாங்கள் அணி சேர மாட்டோம்.
அதேபோல பாஜகவுடனும் கூட்டணி சேர மாட்டோம். அதற்குப் பதில் பேசாமல் எதிர்க்கட்சியாக அமருவோம்.
துப்பாக்கி சண்டை, தீவிரவாதிகள் பயம் இல்லாமல் ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ள தேர்தல் இது.
அரசுக்கு எதிரான அதிருப்தியும் மக்களிடையே அதிக அளவில் இருந்தது என்றார் உமர்.
கூட்டணிக்கும் தயார், எதிர்க்கட்சியாகவும் தயார்: மஹபூபா
மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மஹபூபா முப்தி தேர்தல் முடிவு குறித்து கூறுகையில், இது எங்களது கட்சிக்கு முடிவல்ல. உண்மையில் காஷ்மீரில் எங்களது செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. கடந்த முறையை விட கூடுதல் இடங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.
கடந்த 2002ம் ஆண்டு செய்து கொண்டதைப் போன்ற குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் கூடிய கூட்டணிக்கு, எந்தக் கட்சியுடனும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அது சாத்தியப்படாவிட்டால் எதிர்க்கட்சியாக அமரவும் நாங்கள் தயார் என்றார் முப்தி.












Click it and Unblock the Notifications