பெங்களூர்: ராணுவ வளாகத்திற்குள் நுழைந்த மாணவர் சுட்டுக் கொலை
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ராணுவக் முகாமுக்குள் நுழைந்த கல்லூரி மாணவரை, பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பெங்களூர் பால்ட்வின் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தவர் முனிராம் (20). இவர் இன்று அதிகாலை 1 மணியளவில் தனது நண்பர்கள் சிலரோடு, எம்.ஜி. சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த போலீஸார் அவர்களை நிற்குமாறு கூறியுள்ளனர். போலீஸாரைப் பார்த்த முனிராமும் அவரது நண்பர்களும், அங்கிருந்து ஓடினர்.
விமான நிலைய சாலையில் உள்ள ராணுவ தலைமையக அலுவலக வளாகத்திற்குள் முனிராம் புகுந்து ஓடியுள்ளார். அங்குள்ள ஒரு கட்டடத்தின் மீது ஏறி ஒளிய முயன்றார்.
முனிராம் மாடி மீதி ஏறுவதை துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பார்த்து விட்டனர்.
இதையடுத்து அவர்கள் முனிராமை கீழே இறங்கி வருமாறும், சரணடையுமாறும் உத்தரவிட்டனர். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கு சந்தேகம் பிறந்தது.
ஆனால் முனிராம், பாதுகாவலர்களிடம் சிக்காமல் தப்புவதற்காக வேறு பக்கத்தில் குதித்து சுற்றுச்சுவரை நோக்கி ஓடியுள்ளார்.
இதையடுத்து அவரை நோக்கி பாதுகாவலர்கள் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்து பிணமானார் முனிராம்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications