ஜிஎஸ்எம் சேவையை விரிவாக்கும் ரிலையன்ஸ்
மும்பை: சிடிஎம்ஏ செல்போன்களுக்கு புகழ்பெற்ற ரிலையன்ஸ் இப்போது ஜிஸ்எம் சேவையையும் அளிக்கிறது.
தற்போது எட்டு வட்டங்களில் மட்டும் ஜிஎஸ்எம் சேவை வழங்கி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இப்போது மேலும் 14 வட்டங்களுக்கு அந்த சேவையை விரிவுபடுத்தப் போகிறது.
இதற்கென ரூ.10,000 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் சி.டீ.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். செல்போன் சேவை அளிக்க தொடங்கிய பின்னர், தேசிய அளவில் இந்த இரண்டு வகை தொழில் நுட்பத்திலும் சேவையளிக்கும் ஒரே நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உருவெடுக்கும். பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள், சில குறிப்பிட்ட வட்டங்களில்தான் இவ்விரண்டு சேவைகளையும் வழங்கி வருகின்றன.
இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி செவ்வாய்க்கிழமை கூறுகையில், தற்போது நிறுவனம் 11,000 நகரங்களிலும், 3 லட்சம் கிராமங்களிலும் ஜி.எஸ்.எம். செல்போன் சேவையளித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் இச்சேவையை பெறும் நகரங்களின் எண்ணிக்கை 24,000 ஆகவும், கிராமங்களின் எண்ணிக்கை 6 லட்சமாகவும் உயரும்.
இந்த திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை திரட்ட, நிதி ஆதாரம் வலுவாக உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications