தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று தொடக்கம்
டெல்லி: இந்தியாவின் எப்பிஐ என வர்ணிக்கப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று முதல் செயல்படத் தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்த புலனாய்வு ஏஜென்சி இயங்கும். ஏஜென்சியைத் தொடங்குவதற்கான உத்தரவு நாளை (இன்று) பிறப்பிக்கப்படும்.
தேசிய புலனாய்வு ஏஜென்சியைத் தொடங்குவதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அனுமதி வழங்கி விட்டார்.
புதிய ஏஜென்சிக்கு இயக்குநர் ஜெனரல் தலைமை வகிப்பார். அவரது நியமனம் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்.
தீவிரவாத குற்றங்கள் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ மேற்கொள்ளும்.
என்.ஐ.ஏ மூலம் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை தீர்மானிக்க இரு நீதிபதிகள் கொண்ட கமிட்டி முடிவு செய்யும். தங்களிடம் வரும் வழக்குகளை 7 நாட்களுக்குள் பரிசீலித்து, அவற்றை என்.ஐ.ஏ விசாரணைக்கு விடலாமா என்பது குறித்து இந்த கமிட்டி முடிவு செய்யும். அதன்பிறகு அரசிடம் அந்த முடிவு வரும். அரசு அதே ஏழு நாட்களுக்குள் முடிவு செய்து என்.ஐ.ஏவிடம் அந்த வழக்கை அனுப்பும்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டுள்ளது.
பாக்.கை இந்தியா தாக்காது?
இஸ்ரேலியப் படைகள், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதை நாம் முன் மாதிரியாகக் கொண்டு பாகிஸ்தான் விவகாரத்தில் செயல்பட முடியாது. அந்த எண்ணமும் இந்தியாவுக்கு இல்லை.
இஸ்ரேல் தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் விட வேண்டும் எனவும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.
இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை தெளிவாக ஏற்கனவே விளக்கி விட்டது என்றார் சிதம்பரம்.
சிதம்பரம் கூறுவதைப் பார்த்தால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்று தெரிகிறது.