2009ம் ஆண்டு பிறந்தது - உலகெங்கும் கொண்டாட்டம்
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2008ம் ஆண்டு முடிந்து 2009ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உற்சாகமான கொண்டாட்டங்கள் இடம் பெற்றன.
அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருந்தன.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமான வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
லண்டன் நாடாளுமன்றத்திற்குப் பின்புறம் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது வான வேடிக்கைள் கண்ணைப் பறித்தன.
இந்தியாவில் ...
இந்தியாவிலும் புத்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. அனைத்து முக்கிய நகரங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு ஹேப்பி நியூ இயர் கோஷத்துடன் வான வேடிக்கைகள், பட்டாசு வெடிப்புடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான மும்பையில் ஆடம்பரமான விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி மீண்ட தாஜ்மஹால் ஹோட்டலில் எளிமையான அதேசமயம், உற்சாகமான புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாஜ் மஹால் ஹோட்டல் அழகிய வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ...
தமிழகத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டின. சென்னையில் மெரீனா கடற்கரையில் லட்சணக்கானோர் கூடி புத்தாண்டை வரவேற்றனர்.
போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததால் தாறுமாறாக வண்டிகளை ஓட்டி புத்தாண்டு வாழ்த்துச் சொல்வோரின் எண்ணிக்கை அடியோடு குறைந்திருந்தது.
சென்னை நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசுகள் வெடித்தும், பாடல்களை ஒலித்தும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
தேவாலயங்களில் நள்ளிரவுப் பிரார்த்தனைகள் களை கட்டியிருந்தன.
சில பகுதிகளில் கோவில்களும் திறக்கப்பட்டு புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தமிழகம் முழுவதும் புத்தாண்டையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.