சாலை விபத்தில் கலெக்டரின் உறவினர்கள் இருவர் பலி
கரூர்: கரூரில் நடந்த சாலை விபத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டியின் உறவினர்கள் இருவர் பலியாயினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அரிகரேயை அடுத்த மைக்கோ லே-அவுட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (62). இவரது மனைவி சகுந்தலா (59). இவர்களது மகன் சுரேஷ்குமார் (40), மருமகள் லாவண்யா (35), பேத்திகள் சுரேகா (8), சினேகா (6).
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டியின் மனைவி மலர்விழியின் சகோதரிதான் சகுந்தலா. சுரேஷ்குமார் கம்யூட்டர் என்ஜினீயர். பெங்களூரில் ஒரு வேலை பார்த்து வந்தார்.
சுப்பிரமணி தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்திகளுடன் ஒரு காரில் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டார். காரை சுப்பிரமணி ஓட்டினார். கார் கரூரை அடுத்த மண்மங்கலம் தூளிப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. லாரி ரோட்டில் கவிழ்ந்தது. காரில் இருந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். அவரது தாய் சகுந்தலா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலி ஆனார்.
சுப்பிரமணி, லாவண்யா, சுரேகா, சினேகா ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.