சத்யம் - ராமலிங்க ராஜுவின் பங்குகள் குறைந்தது
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் அதன் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இருந்த பங்குகளின் அளவு 8.27 சதவிகிதத்திலிருந்து 5.13 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ். இதில், அதன் நிறுவனர் மற்றும் தலைவர் பீ.ராமலிங்கராஜுவின் குடும்பத்தினர் கொண்டிருந்த பங்கு மூலதன அளவு 8.27 சதவீதமாகும்.
சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பல 'புயல்கள்' காரணமாக 5.13 சதவீதமாக குறைந்துள்ளது ராமலிங்கராஜூ குடும்பத்தினருக்கிருந்த பங்குகள் அளவு.
இந்த தகவலை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று பங்குச் சந்தைகளுக்கு தெரிவித்துள்ளது.
பீ.ராமலிங்கராஜு, சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் கொண்டிருந்த பங்குகளை நிதி நிறுவனங்களிடம் அடமானம் வைத்திருந்தார். இந்நிலையில், நிதி நிறுவனங்கள் இதில் 2.11 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இதனால்தான் ராஜு குடும்பத்தினரின் பங்கு மூலதன அளவு 5.13 சதவீதமாக குறைந்துள்ளது.
அபர்டீன் அசெட் மேனேஜ்மெண்ட், ஃபிடிலிட்டி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், சத்யம் கம்ப்யூட்டர்சில் 61 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.