ரூ. 200 கோடியை கொட்டிய திமுக, அதிமுக: தேமுதிக புகார்
மதுரை: திருமங்கலம் தொகுதியில் திமுகவும், அதிமுகவும் சேர்ந்து இதுவரை ரூ. 200 கோடியை செலவிட்டுள்ளதாக தேமுதிக புகார் கூறியுள்ளது.
மதுரையில் தேர்தல் பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தேமுதிக நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் சந்தித்து புகார் கொடுத்தார். பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவும், அதிமுகவும் பணத்தை தண்ணீராக செலவழித்து வருகின்றனர். இதுவரை இரு கட்சிகளும் சேர்ந்து ரூ. 200 கோடி வரை செலவிட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
மாநில காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளோம் என்றார்.
போலீஸ் - தொண்டர்கள் மோதல்
முன்னதாக தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் தலைமையில் தேமுதிகவினர் புகார் கொடுக்க திரண்டு வந்தனர். அப்போது ஏழு பேரை மட்டுமே உள்ளே அனுமதிப்போம் என அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்க கூறினார்.
இதையடுத்து அவருடன் தேமுதிகவினர் வாதிட்டனர். கடும் வாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுதீஷ் தலையிட்டு தேமுதிகவினரை அமைதிப்படுத்தினார்.