கிளிநொச்சியில் .. வெறும் நாய்களும், மாடுகளுமே உலவுகின்றன!
கிளிநொச்சி: விடுதலைப் புலிகளிடமிருந்து ராணுவம் மீட்டுள்ள கிளிநொச்சியில் மனிதர்கள் யாருமே இல்லை. வெறும் நாய்களும், மாடுகளும் மட்டுமே உலவி வருவதாக இலங்கை மீடியாக்கள் கூறியுள்ளன.
கிளிநொச்சி நகரை மீட்டதைத் தொடர்ந்து அங்கு சிங்கள, ஆங்கில செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக இலங்க மீடியாக்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ..
கொழும்பிலிருந்து அனுராதபுரம் வான்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்கள், ஹெலிகாப்டர் மூலம் மாங்குளம் சென்றடைந்தனர். அதன் பின்னர் ஏ-9 சாலை வழியாக கிளிநொச்சி சென்றடைந்தனர்.
கிளிநொச்சி நகர் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. சற்று தொலைவில் துப்பாக்கிச் சண்டையும் எறிகணை வீச்சு சத்தமும் கேட்டவாறு உள்ளது.
கிளிநொச்சி நகரில் தெருநாய்கள் மட்டுமே திரிந்து கொண்டிருக்கின்றன. கைவிடப்பட்ட கால்நடைகளையும் காண முடிந்தது.
நாளுக்கு நாள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி சுருங்கி வருகிறது என்று கிளிநொச்சி படை நடவடிக்கைக்கு தலைமை வகித்த ஜெகத் டயஸ் கூறினார்.
விடுதலைப் புலிகளின் இதர பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். பிரபாகரனை விரைவில் பிடித்து விடுவோம் என்றார் அவர் என்று அந்த செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, கிளிநொச்சிக்கு மீண்டும் மக்கள் திரும்பி வர வேண்டும். மக்களுக்காகத்தான் இந்த சண்டை நடந்து வருகிறது. தற்போது கிளிநொச்சி முழுமையாக மீட்கப்பட்டு விட்டதால், தமிழர்கள் திரும்பி வர வேண்டும். அவர்களை ராணுவம் குறி வைக்காது என்று ராணுவத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணுவம், கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே அங்கிருந்து தமிழர்கள் முற்றிலுமாக இடம் பெயர்ந்து விட்டனர். ராணுவத்தினரிடம் சிக்கி கற்பிழக்கும், அடி, உதைக்கு ஆளாகும் துயரத்திலிருந்து தப்பிக்க முன்கூட்டியே தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடம் பெயர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications