திண்டுக்கல் சாலை விபத்தில் 8 அய்யப்ப பக்தர்கள் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நடந்த கோர விபத்தில் எட்டு அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கே.கே.நகர், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் வேன் மூலம் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்த வேன், இன்று அதிகாலை செம்பட்டி அருகே உள்ள வீரசிக்கம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
எதிர் திசையில் கம்பத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அரசுப் பேருந்து படு மோசமான வேகத்தில் வந்ததாகத் தெரிகிறது. வேகமாக வந்த பேருந்து, அய்யப்ப பக்தர்கள் வந்த பேருந்து மீது பலமாக மோதியது.
இதில் வேன் அப்பளம் போல நொறுங்கிப் போனது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கர விபத்தில், மாரிமுத்து, அரிமுத்து, நீலம்மாள், பாலமுருகன், பத்மநாபன், முரளி, சரவணன், ஆகியோர் உயிரிழந்தனர். இன்னும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை.
இந்த கோர விபத்து காரணமாக அந்த சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.