சமூக சேவகர் 'டிராபிக்' ராமசாமி தாக்கப்பட்டார்
சென்னை: சென்னையைச் சேர்ந்த சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கப்பட்டார்.
சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை தனியாக அவர் இருந்தபோது சிலர் வீடு புகுந்து தாக்கி விட்டுத் தப்பினர்.
பொது நலன் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்கள் சேவை ஆற்றி வருபவர் டிராபிக் ராமசாமி. இதனால் அவருக்கு பல முனைகளிலிருந்தும் மிரட்டல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பிராட்வே பகுதியில், போக்குவரத்து சீர்குலைவை சரி செய்ய ஜோன்ஸ் சாலையில் புதிய போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை அறிவித்தது. இதற்கு டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கே காரணம்.
இதனால் வெங்கட மேஸ்திரி சாலை, ஜோன்ஸ் சாலை, செம்புதாஸ் தெரு பகுதி வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டில் ராமசாமி இருந்தபோது சிலர் வந்து கதவைத் தட்டியுள்ளனர். ராமசாமி எழுந்து வந்து கதவைத் திறந்துள்ளார்.
அப்போது அந்தக் கும்பல் ராமசாமியை கீழே தள்ளி விட்டு சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அக்கும்பல் ஓடி விட்டது.
போக்குவரத்து மாற்றங்களை எதிர்த்து சனிக்கிழமையன்று 2500க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள், கடைகளை அடைத்து விட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கடைக்காரர்கள்தான் டிராபிக் ராமசாமியைத் தாக்கியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.