கள்ளத்துப்பாக்கி வி்ற்பனை-பெண் கைது
தூத்துக்குடி பகுதியில் போலீசார் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த வேட்டையில், தெர்மல் நகர் சரவணகுமார், முத்துகிருஷ்ணாபுரம் மாயாண்டி, இந்திரா நகர் பழனிகுமார், கேவிகே நகர் மணிமாறன் ஆகிய 4 பேரை தனிப்படையினர் கடந்த 27ம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகளையும், 33 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தவர் வண்டலூர் ராமன் நாயர் மகன் செல்வம் என்ற செல்வராஜ். அவருக்கு துணையாக இருந்தவர் அம்பத்தூர் ராமபுரத்தை சேர்ந்த நிர்மலா.
செல்வராஜ் பிரவுன் சுகர், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்த வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
போலீசாரிடம் செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தில்,
பிரவுன்சுகர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெங்கடேசன் என்பவரை அடிக்கடி பார்க்க செல்வது வழக்கம்.
அதே சிறைக்கு அம்பத்தூரை சேர்ந்த நிர்மலா (35) என்ற பீகார் பெண் அடிக்கடி சிறையில் இருக்கும் ஒருவரை பார்க்க வருவார். சிறைக்கு வெளியே காத்திருக்கும்போது நிர்மலாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
நிர்மலாவின் கணவர் கவுதேஷ் பீகாரில் இருந்து கள்ள துப்பாக்கிகளை கடத்தி வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து ஒரு துப்பாக்கி 1 லட்சத்து 25 ஆயிரம் விலையில் வாங்கி அவற்றை நான் தூத்துக்குடியில் விற்பனை செய்தேன். மேலும் துப்பாக்கிகளை பீகாரில் இருந்து கடத்தி வர சொல்லி இருக்கிறேன் என்றார்.
இதையடுத்து நிர்மலாவைப் பிடிக்க டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர் மகிமை வீரன், தேவேந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 31ம் தேதியில் இருந்து சென்னையில் முகாமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அம்பத்தூரில் பதுங்கி இருந்த நிர்மலாவை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
நிர்மலா, தனது கணவர் கவுதேஷுடன் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக அம்பத்தூரில் வசிக்கிறார். அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கவுதேஷ் வேலை பார்த்து வந்தார். வேலை தொடர்பாக இவருக்கு அடிக்கடி பீகாருக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. அப்போது அங்கு துப்பாக்கி, போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நிறைய பணம் கிடைத்ததால் வேலையை விட்ட கவுதேஷ் பீகாரிலேயே தங்கி அவ்வப்போது கள்ள துப்பாக்கிகளை அங்கிருந்து கடத்தி வந்து மனைவி நிர்மலாவிடம் கொடுப்பாராம். சில நேரங்களில் அவரால் வர முடியாவிட்டால் அங்கிருந்து அவருக்கு நெருக்கமான நபர்கள் மூலம் துப்பாக்கியும், தோட்டாக்களும் கொடுத்து அனுப்புவாராம்.
அவற்றை வாங்கி நிர்மலா தமிழ்நாட்டில் உள்ள ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஏஜண்டுகளில் ஒருவர்தான் செல்வராஜ் என்பதும் தெரிய வந்துள்ளது.
நிர்மலாவை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்து 3 கள்ள துப்பாக்கிகள் மற்றும் 48 தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை தூத்துக்குடி போலீசார் 8 கள்ள துப்பாக்கிகளை பறிமுதல் செய்து உள்ளனர். இவை 9எம்.எம்.பிஸ்டல் வகையை சார்ந்தவை. வழக்கமான துப்பாக்கிகளை விட சற்று மாறுதலாக உள்ளது. இவை எங்கு தயாரிக்கப்பட்டவை போன்ற விவரங்கள் அதில் இல்லை.
இவை பீகாரில் தயாரிக்கப்பட்டவையா? அல்லது பாகிஸ்தான், சீனா போன்ற வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு பீகார் வழியாக கடத்தப்பட்டவையா? என்பது போன்ற விவரங்களை கியூ பிரிவு போலீசார் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் மேலும் பல இடங்களில் உள்ள ரவுடி கும்பலுக்கு நிர்மலா மூலம் துப்பாக்கி சப்ளை செய்யப்பட்டு உள்ளதா என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நிர்மலாவிடம் கள்ளத் துப்பாக்கி காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் நாகரத்தினகுமார் தலைமறைவானார். அவரது வீட்டிலிருந்தும் ஒரு துப்பாக்கி 46 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.