திருமங்கலம்-110 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என மதுரை சரக டிஐஜி அம்ரேஷ் பூஜாரி அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 8 கம்பெனிகளைச் சேர்ந்த 800 துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1700 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுதியில் மொத்தம் 15 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனை பணியை மேற்கொண்டுள்ளனர்.
செக் போஸ்ட்களில் போலீஸ் வீடியோகிராபர் மூலம் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகிறது. பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்காக அதிரடிப்படையினர் 25 வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்குள் திருமங்கலம் தொகுதியில் உள்ள வாக்காளர் அல்லாதவர்கள் மற்றும் திருமங்கலம் தொகுதியை சேராத வெளியூர் ஆட்கள் உடனடியாக திருமங்கலம் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.
அவ்வாறு வெளியேற தவறும் பட்சத்தில் அவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
பிரசாரம் ஓய்கிறது:
இதற்கிடையே நாளை மறுநாள் (9ம் தேதி) தேர்தல் நடைபெறுவதையடுத்து இன்று மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது.
110 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை:
இங்குள்ள 1,55, 647 வாக்காளர்கள் ஓட்டளிக்க 190 வாக்குச் சாவடிகள் அமைக்ககப்பட்டுள்ளன.
இங்கு மொத்தம் 380 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இவை நாளை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தொகுதி முழுவதும் 33 கிராமங்களில் 110 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.