பாக் மீது போர்: இல்லாவிட்டால்..சமாஜ்வாடி மிரட்டல்
டெல்லி: பாகிஸ்தான் மீது உடனடியாக போர் தொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட பாகிஸ்தான் குறித்து மத்திய அரசு மென்மையான போக்கைக் கையாண்டால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும் என சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களிடையே கருத்து நிலவுகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்காவிட்டால், காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் கடும் நடவடிக்கை எடுத்து வருவதைப் போல இந்தியாவும் தாக்குதல் நடத்தும் என ஏன் அமெரிக்கா, பாகிஸ்தானை எச்சரிக்கக் கூடாது.
பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் தொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்போம் என்றார் அமர்சிங்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு கை கொடுத்த கட்சி சமாஜ்வாடி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இப்படி ஒரு மிரட்டலை அது விடுத்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications