ஸ்ரீவைகுண்டம்: 2 கிராமங்களில் காலரா
ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இரு கிராமங்களில் பரவியுள்ள காலராவுக்கு 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் கடந்த 1ம் தேதி முதல் காலரா பரவியது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீவைகுண்டம், பாளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று பாதிப்பு அதிகரித்தது. கொங்கராயக்குறிச்சியை சேர்ந்த லெட்சுமி, கண்ணன், சுதா, செல்லம்மாள், செல்வி, அன்புதாய், பாலசுந்தரி, கிறிஸ்துராணி உள்பட 15 பேர் ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று மேல்சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிறிஸ்துராணியின் 5 மாத குழந்தை ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது.
தற்போது கொங்கராயக்குறிச்சியி்ல் இருந்து வாந்தி பேதி தென்திருப்பேரைக்கு பரவியுள்ளது. தென்திருப்பேரையை சேர்ந்த கல்யாணி, சித்ரா என்ற 2 வயது குழந்தையும் பாதிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி காளியப்ப ராமையா, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் புஷ்பம்மாளிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கொங்கராயக்குறிச்சி வாந்தி பேதிக்கு எந்த தடுபபு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கிராம செவிலியரும் ஊரில் இல்லை.
எனவே உடனடியாக வாந்தி-பேதியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.