பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு: நாடே ஸ்தம்பிப்பு!-மக்கள் பெரும் அவதி!
டெல்லி: எண்ணை நிறுவன அதிகாரிகளின் வேலைநிறுத்தம் மற்றும் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் ஆகிய இரட்டை அடி காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள முக்கால்வாசி பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு விட்டன. மக்கள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சம்பள உயர்வு கேட்டு நாடு முழுவதும் உள்ள எண்ணை நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கி யுள்ளனர்.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஐ.ஓ.சி., பாரத் பெட் ரோலியம், கெயில், ஓ.என். ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் உள்பட 14 பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களைச் சார்ந்த 55 ஆயிரம் அதிகாரிகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கை களை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் அனுமதி இல்லாமல் கச்சா எண்ணை எடுப்பது, எண்ணையை சுத்திகரிப்பு செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் வினியோகம் போன்ற பணிகள் நடை பெறாது என்பதால் எண்ணை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கெயில் நிறுவனம் சார்பாக குழாய் மூலம் எரிவாயு அனுப்பப்படுவதும் நிறுத்தப்பட்டு விட்டது.
ஐ.ஓ.சி. நிறுவனத்தின் ஹால்டியா எண்ணை சுத்தி கரிப்பு ஆலை மூடப்பட்டு விட்டது. பானிபட், மதுரா, கோயாலி ஆகிய எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளில் படிப்படியாக சுத்திகரிப்பு பணி குறைந்து வருகிறது.
விமானப் போக்குவரத்தில் பாதிப்பில்லையாம் ..
ஐ.ஓ.சி. தலைவர் சர்தக் பெவுரியா கூறுகையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தால் விமான போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்குகள் மற்றும் கிடங்குகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான இருப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
அதிகாரிகள் வேலை நிறுத்தத்தால் மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது. நான்கு உள்நாட்டு விமானங்கள், அரை மணி நேரம் வரை காலதாமதமாக சென்றன.
எனினும் வெளிநாட்டு விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இதே நிலை நீடித்தால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்படுவது உறுதி
மக்கள் சொல்லொணா அவதி ..
டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நிலைமை மேலும் சிக்கலாகி உள்ளது.
டீசல் விலை, மாநில எல்லைகளில் விதிக்கப்படும் நுழைவு வரி ஆகிய வற்றை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழனன்று நான்காவது நாளாக தொடர்ந்தது.
இந்நிலையில் இப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகிக்கும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் பெட்ரோல் ஸ்டாக் இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் கிடைக்கும் சிற் சில விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
சில இடங்களில் குறைந்தளவு பெட்ரோல், டீசல் மட்டுமே வாகனங்களுக்கு அளிக்கப்படுகிறது.
திறந்திருக்கும் ஓரிரு பங்குகள் முன் கைக்குக் கிடைத்த கேன்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.
பல பகுதிகளில் வண்டிகள் பாதியில் நின்று உருட்டிக் கொண்டு செல்வதைக் காண முடிந்தது.
சிஐடியு கண்டனம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரிகளின் உரிமங்களை ரத்து செய் வோம் என்று மிரட்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு சாலைப்போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத் தின் மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட் டம் வியாழனன்று சேலத்தில் நடந்தது. சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சவுந்தரராசன், மாநிலத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் மத்திய அரசு லாரிகளின் உரிமங்களை ரத்து செய்வோம் என மிரட்டியுள்ளது கண்டிக்கத் தக்கது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் இப் போக்கைக் கண்டித்தும், விபத்தைக் காரணம் காட்டி ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும், கூட் டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் வரும் 22ம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டணி சார்பில் தொழிலாளர் உரிமைக்காக நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.