காஸாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல் - பலி 850 ஆனது
காஸா: காஸா நகரம் மீதான இஸ்ரேலின் வெறித் தாக்குதல் இன்னும் ஓயவில்லை. அங்கு இஸ்ரேலின் தாக்குலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட் ஏவுதளப் பகுதிகள், ஆயுத கிட்டங்கிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களையும் இஸ்ரேல் விமானம் மூலம் வீசி வருகிறது.
காஸா நகர தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர், காயமடைந்தோரின் உறவினர்கள், குடும்பத்தாரின் கூட்டத்தால் மருத்துவமனைகள் அழுகுரல் மையங்களாக மாறிக் காணப்படுகின்றன.
காஸா நகரம் முழுதும் எங்கு பார்த்தாலும் இடிபாடுகளும், கரும்புகை மூட்டமுமாக காணப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இதுவரை 850க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 4 பாதுகாப்புப் படையினர் உள்பட 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே காஸாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், தற்போது காஸா நகருக்குள் மெதுவாக முன்னேறிச் செல்கிறது. இதுவரை ஒன்றரை கிலோமீட்டர் வரை உள்ளே போயுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தெற்கு இஸ்ரேல் பகுதியில் 15 ராக்கெட்களை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பீதி நிலவுகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 3 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம், ஜெபாலியா எனற இடத்தில், இஸ்ரேல் பீரங்கி்த் தாக்குதலில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
ரபா என்ற நகரில், இஸ்ரேல் வான் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications