கோபத்தில் முட்டிக் கொண்டு அமர்சிங் காயம்
டெல்லி: கோரக்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியேற விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கண்ணாடிக் கதவில் பலமாக தனது தலையால் முட்டினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் கட்டுப் போட்டனர்.
உ.பி. மாநிலம் கோரக்பூரில் போராட்டம் நடத்துவதற்காக கட்சித் தொண்டர்களுடன் வந்தார் அமர்சிங். ஆனால் அவரை விமான நிலையத்திலேயே போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டனர்.
அப்போது கோபமடைந்த அவர் விமான நிலைய ஓய்வறையின் கண்ணாடிக் கதவில் போய் பலமாக முட்டினார். இதில் நெற்றியிலிருந்து ரத்தம் வந்தது.
இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு தலையில் கட்டு போடப்பட்டது. அதன் பின்னரே ரத்தக் கசிவு நின்றதாம்.
ஆனால், போலீஸார் தன்னை லத்தியால் தாக்கியதாகவும், அதனால்தான் தலையில் காயம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார் அமர்சிங்.
இருப்பினும், கதவில் முட்டிக் கொண்டதால்தான் காயம் ஏற்பட்டதாக அவரது கட்சியைச் சேர்ந்தவரும், கோரக்பூர் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிடவுள்ளவருமான பாடகர் மனோஜ் திவாரி கூறியுள்ளதால் என்ன நடந்தது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மும்பையில் உள்ள சஞ்சய் தத்தின் வீட்டுக்கு வந்தபோது கூட தலையில் கட்டுடன்தான் வந்தார் அமர்சிங் என்பது நினைவிருக்கலாம்.
காங். செய்தித் தொடர்பாளர் நீக்கம்:
இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி சார்பில் சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அமர் சிங்கை விமர்சித்துப் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சதுர்வேதி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்தின் இந்த நடவடிக்கையால் சமாஜ்வாதி கட்சி மகிழ்ச்சியடைந்துள்ளது. இதனை நல்ல தொடக்கம் என்று தெரிவித்துள்ள அமர்சிங் இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications