குருவாயூர் எக்ஸ்பிரஸ் மீது என்ஜின் மோதல்
திருச்சி: மிகப்பெரும் விபத்தில் இருந்து தப்பியது குருவாயூர் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் மீது சோதனை ரயில் என்ஜின் மோதியதில் 4 பயணிகள் காயமடைந்தனர். 2 பெட்டிகள் சேதமடைந்தன.
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னைக்கு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்துக்கு நேற்று சுமார் 30 நிமிடம் தாமதமாக 2.20 மணிக்கு வந்தது.
அப்போது ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ரயில் என்ஜினை டிரைவர் கலியமூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். குருவாயூர் எக்ஸ்பிரஸ் வருவதை கவனிக்க தவறிய அவர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மீது மோதினார்.
இதில் ஒரு பெட்டி முழுவதுமாகவும், இன்னொரு பெட்டியின் ஒரு பகுதியும் சேதமடைந்தன. இதையடுத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. பிளாட்பார வசதி இல்லாததால் பயணிகள் அனைவரும் தங்களுடைய பொருட்களுடன் ரயில் பெட்டிகளில் இருந்து கீழே குதிக்க வேண்டிய பரிதாப நிலைமை ஏற்பட்டது.
விபத்தில் மதுரையைச் சேர்ந்த சிவகுமார் ( 30), அவரது 10 மாத கைக் குழந்தை ரீனா, மணப்பாறை ரயில்வே ஊழியர் தங்கராஜ் (54), மேற்கு வங்கத்தை சேர்ந்த சுதீஷ் விஸ்வாஸ் (30) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
சேதமடைந்த பெட்டிகளில் இருந்த பயணிகளுக்கு வேறு பெட்டிகளில் இடம் வழங்கப்பட்டது, அவசரமாக செல்லவேண்டும் என விரும்பிய பயணிகளுக்கு வேறு ரயிலில் பயணம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். பின்னர் மாலை 5 மணி அளவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டது.
சோதனை என்ஜினை ஓட்டிச்சென்ற டிரைவரிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.