மத்திய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: இலங்கை தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் சிங்கள ராணுவத்துக்கு உதவும் இந்திய அரசுக்கும், அதற்குத் துணைபோகும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 28ம் தேதி மதிமுக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈவு இரக்கமற்ற சிங்கள அரசு விமான மற்றும் பிரங்கித் தாக்குதல் மூலம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. அவர்களுக்கு இந்திய அரசு பெருமளவில் ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகிறது. முல்லைத் தீவில் 6 லட்சம் தமிழர்கள் உணவின்றி, மருந்தின்றி தவிக்கிறார்கள்.
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது ராணுவத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்துள்ளது.
இலங்கையிலும் போர் நிறுத்தத்திற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.
இலங்கை செனற சிவசங்கர மேனன் சிங்கள ராணுவத்தினரை பாராட்டியுள்ளார்.
சிங்கள அரசிடம் பிச்சை கேட்டு அடிமைகளாக வாழ்வதை விட மாழ்வதேமேல் என்று ராணுவத் தாக்குதல்களுக்கு அஞ்சாமல் மரண பூமியில் ஈழத் தமிழர்கள் தவிக்கின்றார்கள். தமிழர்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், ஒவ்வொரு தமிழனின் மரணத்துக்கும் மத்திய அரசும், அதற்கு துணை நிற்கும் திமுகவும் தான் பொறுப்பு.
இலங்கை தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் சிங்கள ராணுவத்துக்கு உதவும் இந்திய அரசுக்கும், அதற்குத் துணைபோகும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 28ம் தேதி மதிமுக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என்றார் வைகோ.