இலங்கைப் பிரச்சினை: சட்டசபையில் காங். - சிபிஐ மோதல் சென்னை
சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களிடையே இன்று கடும் வாக்குவாதம் நடந்தது.
சட்டசபையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது இன்று விவாதம் நடந்தது.
விவாதத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் பேசியதாவது ...
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை):- இலங்கை தமிழ் மக்கள் படும் அவதியையும், சந்தித்து வரும் கொடுமை யையும் நாடு அறியும். ஏற்கனவே சட்டசபையில் இது பற்றி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பிரதமரையும் சந்தித்தோம். இலங்கை போரை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளனர் என்றாலும் தமிழர் படுகொலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை. எனவே போர் நிறுத்தம் ஏற்படும் வகையில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரத்தை அங்கு அனுப்பி அமைதி ஏற்பட செய்ய வேண்டும்.
சிவபுண்ணியம் (இந்திய கம்iனிஸ்டு):- முதல்வர் ஒரு தீர்மானம் கொண்டு வருவதாக பத்திரிகைகளில் படித்தேன். அதை முதலில் கொண்டு வந்தால் எங்கள் கருத்துக்களை கூற முடியும்.
முதல்-அமைச்சர் கருணாநிதி:- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பலர் விரும்புவதால் நான் கொண்டு வரும் தீர்மானம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.
சிவபுண்ணியம்:- இலங்கை போர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 5 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். எங்கள் கட்சி தலைவர் ஜீவா 1954-ம் ஆண்டிலேயே இதே சட்டசபையில் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஆனால் இன்று வரை அங்கு மனித உரிமை மீறல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை.
அப்போது காங்கிரஸ் குறித்து அவர் கூறிய ஒரு கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிவபுண்ணியம் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
தொடர்ந்து சிவபுண்ணியம் பேசுகையில், மத்திய அரசு பற்றி பேசாமல் இந்த பிரச்சினை பற்றி எப்படி பேசுவது என்றார். அப்போதும் காங்கிரஸார், சிவபுண்ணியம் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்து எழுந்து நின்றனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், மத்திய அரசு பற்றிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனவே அமைதியாக இருங்கள் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் குறுக்கிட்டு, முதல்-அமைச் சர் ஒரு நல்ல நோக்கத்தோடு இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தீர்மானமும் கொண்டு வர இருக்கிறார். பிரச்சினையை திசை திருப்பும் வகையில் பேச வேண்டாம் என்றார்.
தொடர்ந்து சிவபுண்ணியம் பேசுகையில், காசா போர் உலக நாடுகளின் கோரிக்கையால் நிறுத்தப்பட்டு விட்டது என்று கூறி இந்திய ராணுவம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். அதற்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிவபுண்ணியம் பேசினார். இதுவரை 2 முறை தீர்மானம் நிறைவேற்றியும், பல போராட்டம் நடத்தியும் மத்திய அரசு போரை நிறுத்த சொல்லி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை கூட செய்யவில்லை என்றார்.
அப்போதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், சிவபுண்ணியம் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications