ஈழத் தமிழர்களுக்காக புதுவை மாணவர்கள் நாளை கருப்பு பேட்ஜ் போராட்டம்
புதுச்சேரி: ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து புதுச்சேரியில், அனைத்துக் கல்லூரி பள்ளி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்துகிறார்கள்.
ஈழத் தமிழர் படுகலையைக் கண்டித்தும், இந்திய அரசே இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்து என வலியுறுத்தியும், புதுச்சேரியில் நாளை அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்துப் போராட்டம் நடத்த உள்ளனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்து வருகிறது. சொந்த நாட்டு மக்கள் 3 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஈவு இரக்கமற்ற இராணுவம் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி வருகின்றனர்.
எனவே, சிங்கள இனவெறி அரசின் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசே இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், நாளை புதுச்சேரி முழுவதுமுள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்துப் போராட்டம் நடத்துவர்.
மேலும், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.
இத்தகவலை புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.