சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இத்திட்டம் திருவெற்றியூர் வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது. 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் இருப்பு பாதைகள் அமைக்கப்பட உள்ளன. 2026ம் ஆண்டில் தினமும் சுமார் 13 லட்சம் பேர் இதை பயன்படுத்துவார்கள் என தெரிகிறது. பயண நேரமும் பாதியாக குறைந்துவிடும்.
சுமார் 24 கி.மீ., நீளம் கொண்ட முதல் பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரையிலும், 21 கி.மீ., நீளம் கொண்ட இரண்டாவது பாதை சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும் அமைக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு ஆகும் செலவில் 59 சதவீதம் ஜப்பான் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடனாக கிடைக்கும். மீதமுள்ள தொகையை மத்திய (20 சதவீதம்) மற்றும் மாநில (21 சதவீதம்)அரசுகள் அளிக்கும். இத்திட்டம் 2014-2015ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் திருவெற்றியூரையும் இணைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவெற்றியூரும் இணைக்கப்பட்டால் அதற்கான கூடுதல் தொகையை தமிழக அரசு அளிக்க வேண்டும் என தெரிகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் திட்டத் தலைவர் கூறுகையில், இத்திட்டத்தில் திருவெற்றியூரையும் இணைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளோம் என்றார்.
தமிழக அரசின் செய்திகுறிப்பு ஒன்றில், நிலங்களை கைப்பற்றுதல் மற்றும் கூடுதல் செலவு குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்கிறது.












Click it and Unblock the Notifications