Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் தீர்வு காணும் வரை ஈழத்தில் போராட்டங்கள் ஓயாது: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை அரசு அரசியல் தீர்வு காணும் வரை ஈழத்தில் போராட்டங்கள் ஓயாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

18.10.2008 நாளன்று சென்னையில் தே.மு.தி.க. இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இன்றுவரை போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அதுமட்டுமல்ல தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு போரை தீவிரப்படுத்தியும் உள்ளது.

மனித நேயமற்ற இலங்கை ..

இதன் விளைவாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இலங்கை அரசு முப்படை கொண்டு தமிழ் மக்களை மூர்க்கத்தனமாக தாக்கி கொன்று குவித்து வருகிறது. நாகரிக சமுதாயத்தை கொண்ட நாடுகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்துள்ளன. ஐ.நா. மன்றமும் இலங்கை அரசின் மனித நேயமற்ற போக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

உலகில் எந்த நாடும் தன் சொந்த மக்கள் மீது, தீவிரவாதத்தை ஒடுக்குவதாக சொல்லி ஆகாயத்தில் இருந்து குண்டுமழை பொழிந்ததில்லை. இந்தியா காஷ்மீரில் கூட விமானப்படைத் தாக்குதல் நடத்தியது இல்லை.

ஆனால் இலங்கை அரசு பகை நாட்டின் மீது படையெடுத்து சென்றது போல் தமிழர் பகுதிகளைத் தாக்கி அங்கே சிங்கள அரசின் கொடியை வெற்றிக் கொடி போல் நாட்டி கொக்கரித்துள்ளனர். இதில் சிங்கள அரசு மட்டுமல்ல. சிங்கள வெறியர்களும் கொண்டாடியுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வு சரியாகாது என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ராணுவத் தீர்வை மட்டுமே கையாள்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒடுக்கிவிட்டால், எந்த உரிமையும் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிங்கள அரசு கருதுகிறது.

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு இருந்த சம அந்தஸ்து, சம உரிமை, சம வாய்ப்பு, சிங்கள அரசால் பறிக்கப்பட்டதனாலேயே பிரிவினை கோரிக்கை எழுந்தது. இலங்கையில் மறைந்த தந்தை செல்வா தலைமையில் அறவழியில் இதற்காக போராடிய போது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு அறப்போராட்டத்தை ஒடுக்கியது.

அதன் விளைவுதான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் தோன்றிய வரலாறு ஆகும். எது முதலில் என்றால், தனிநாடு கோரிக்கைதான். பின்னர்தான் சம உரிமைக்கான ஆயுத போராட்டம். இலங்கை அரசு அரசியல் ரீதியாக இன சிக்கலுக்கு தீர்வு கண்டு அறிவிக்காதவரை, இப்பிரச்சினை தீராது. போர்முறைகள் மாறுமே ஒழிய, போராட்டங்கள் ஓயாது.

இலங்கையில் வன்னிப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் பாதுகாப்பான வழி மூலம் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வரலாம் என்று சிங்கள அரசு ஒரு மாயையைத் தோற்றுவிக்கிறது. உண்மையில் அதை நம்பி சென்றால், சிங்கள ராணுவம் தமிழ் இளைஞர்களை கொன்று குவித்து காணாமல் செய்து விடுகிறது. கேட்டால் மேலும் தீவிரவாதிகள் உருவாகக் கூடாது என்பதாலேயே இப்படி செய்வதாக கூறுகின்றனர்.

வீர மரணத்தில் வியப்பில்லை ..

சிங்களவர்களிடம் மாட்டிக் கொண்டு சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி வீரமரணம் அடைவதே மேல் என்று அந்த மக்கள் கருதுவதில் வியப்பில்லை. ஆகவே சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலப்பகுதியை தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

அண்மையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்று அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அங்கு போர் நிறுத்தம் இல்லை என்பதும், வேண்டுமானால் பாதுகாப்பு மண்டல பகுதிகளை அதிகரிப்பதாகவும் அதில் தமிழ் மக்கள் வந்து தங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாபால் பயன் இல்லை ..

பல இடங்களில் தேடி சென்று கொல்வதை விட ஒரே இடத்தில் வரச்சொல்லி, பொறியியல் சிக்க வைக்கும் உபாயமே இந்த பாதுகாப்பு மண்டல பகுதிகளாகும். ஆகவே இந்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரி பயணத்தில் எந்த பயனும் இல்லை.

தமிழ்நாட்டில் தமிழினத்தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருக்கிறார். இந்திய அரசையும் அவர் வழிநடத்துகிறார். அவருக்கு துணையாக, தமிழர் தலைவர்கள் அமைந்துள்ளனர். அவர் உச்சநிலையில் இருப்பினும் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று எண்ணுகிற போது இது அரசியல் சட்டத்தின் கோளாறா? அல்லது அரசியல் நடத்தியதன் விளைவா? என்பதும் புரியவில்லை.

ஜனநாயகம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவதாகும். ஆனால் இலங்கையில் உள்ள விசித்திர ஜனநாயகமோ சிங்களர்களுக்கு மட்டும்தான். தமிழர்களுக்கு அல்ல என்று பிரிவினை வாதத்தை வளர்த்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உண்மையான ஜனநாயக சக்திகளை திரட்டி இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வுரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்த பிரச்சினையை இந்திய அரசு உடனடியாக ஐ.நா மன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+