ஹைஜாக் நாடகம் - ஒருவர் கைது - 2 பேர் விடுதலை
டெல்லி: கோவாவில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தை 163 பயணிகளுடன் கடத்தப் போவதாக கூறி மிரட்டிய சம்பவத்தில் பிடிக்கப்பட்ட 3 பேரில் இருவரை போலீஸார் விடுவித்தனர். ஒருவர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று கோவாவில் இருந்து இண்டிகோ என்ற நிறுவனத்தின் விமானம் 157 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் டெல்லிக்கு சென்றது.
விமானம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது பயணிகளில் ஒருவர் அத்துமீறி நடந்து கொள்வதாக டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஆணையத்துக்கு விமானி தகவல் கொடுத்தார்.
12 ஏ' எண்ணுள்ள சீட்டில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர், விமானத்தை கடத்தி தகர்க்கப்போவதாக மிரட்டியுள்ளார். அவருக்கு ஆதரவாக மேலும் 3 பயணிகள் செயல்பட்டதாகவும், பெண் பயணி ஒருவரை அவர்கள் பிடித்து வைத்துக்கொள்ள முயன்றதாகவும் தெரிகிறது.
இதனால் பீதியடைந்த விமானி, கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு, டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அது நிறுத்தப்பட்டது. கமாண்டோ வீரர்கள், விமான கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் விமானத்தை சுற்றி வளைத்தனர். எல்லை பாதுகாப்பு படை விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டியவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் எம்.மாதவன் நம்பியார் கூறுகையில்,
விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டியதை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டு உடனடி மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. விமான கடத்தல் தடுப்பு நடவடிக்கை குழு, மத்திய மந்திரிசபை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில் உடனடியாக கூடி நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியது.
நிலைமையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆராய்ந்து, பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்தபின் 2 மணி நேரத்துக்குப்பின் பயணிகளை விமானத்தில் இருந்து வெளியே அழைத்துவர முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் மாதவன் நம்பியார்.
இந்த நிலையில் பிடிக்கப்பட்ட 3 பேரில் சமீர் மற்றும் ஹர்பித் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். ஜிதேந்திரா என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டு 14 காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், விமானி நிலைமையை சரியாக புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுத்துள்ளார். பயணிகள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications