தீக்குளித்த பள்ளப்பட்டி ரவி மரணம்
மதுரை: இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி.
2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்த்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ரவி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை அம்மையநாயக்கனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ரவி விவகாரம் குறி்த்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாரி கூறுகையில், வாலிபர் ரவி இலங்கை தமிழருக்காக தீக்குளிக்கவில்லை. 2 வழக்குகளில் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர். இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் தீக்குளித்துள்ளார் என்றார்.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சித் தலைவர் வாசுகி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கை தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.