சென்னை, நெல்லையில் தீக்குளிக்க முயன்ற இருவர் கைது
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையம் முன்பு தீக்குளிப்பதற்காக பெட்ரோலுடன் வந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அதேபோல நெல்லையிலும் ஒருவர் கைது செயயப்பட்டார்.
முத்துக்குமார் தீக்குளிப்பைத் தொடர்ந்து சென்னை நகரின் முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணி்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்டிரல் ரயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளிக்க வரப் போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
காலை முதல் காத்திருந்த போலீஸார் கண்ணில் ஒரு நபரும் தற்கொலைக்கு முயல்வதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் மாலையில் ஒரு வாலிபர் திடீரென அங்கு பெட்ரோல் கேனுடன் வந்தார். ஆவேசமாக கோஷமிட்டபடி மெமோரியல் ஹால் பகுதிக்கு வந்த அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ராஜசேகரன், ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர், ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் நீதிபதி முன்பு அவரை நிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நெல்லையில் ஜோதிடர் தீக்குளிக்க முயற்சி
இதேபோல, நெல்லையில் நேற்று நடராஜன் என்ற கருணாநிதி (44) என்பவர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு மண்எண்ணை கேனுடன் வந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.
நெல்லை டவுன் பாட்டப்பத்து குமரன் தெருவைச் சேர்ந்த நடராஜன் ஒரு திமுககாரர். திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நடராஜனை விட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றனர். நடராஜன் ஜோதிட தொழில் செய்து வந்தார்.
நேற்று காலை நெல்லை போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு இலங்கை தமிழர்கள் வாழ்க, சிங்கள அதிபர் ராஜபக்சே ஒழிக, போரில் விடுதலைப்புலிகள் வெற்றிபெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார். பின்னர் மண்எண்ணையை உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.
இதைக்கண்ட போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்ய முயன்ற நடராஜனை மடக்கிப்பிடித்து அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார், நடராஜன் மீது தீவிரவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டது மற்றும் தற்கொலைக்கு முயன்றது ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடராஜனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications