மொபைல் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவருக்கு ஆபரேஷன்
சென்னை: இலங்கையில் விரைவில் போர்நிறுத்தம் கொண்டுவந்து அப்பாவி தமிழர்களை காக்க வேண்டும் என வலியுறுத்தி, கடலூரில் மொபைல் டவரில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு நேற்று சென்னை அரசு மருத்துமனையில் ஆபரேஷன் நடந்தது.
இலங்கையில் விரைவில் போர்நிறுத்தம் கொண்டுவந்து அப்பாவி தமிழர்களை காக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூரை சேர்ந்த தீனதயாளன் (22) என்ற வாலிபர் நேற்று முன்தினம், 100 அடி உயரமுள்ள மொபைல் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அவருக்கு கை மற்றும் இடுப்பு பகுதிகளில் 2 மணி நேரம் ஆபரேஷன் நடைபெற்றது.
மருத்துவமனையில் இருந்த தீனதயாளனை பார்க்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்தனர்.
நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வந்து உடல்நலன் விசாரித்தனர்.
திருமாவளவன் கூறுகையில், இளைஞர்கள் தெரு முனைக்கு வந்து போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. 4ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டம் ஜனநாயக அடிப்படையில் மக்களால் நடத்தப்படுகின்ற போராட்டம். இது தமிழக அரசிற்கு எதிரான பேராட்டம் அல்ல.
இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசை வற்புறுத்துகின்ற போராட்டம் ஆகும். இந்த போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறுகையில், 4ம் தேதி நடக்கும் பொதுவேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களை காக்க நடத்தப்படும் போராட்டம் என்றார்.












Click it and Unblock the Notifications