புலிகள் மீதான தடையை விலக்கக் கோரி ஹில்லாரிக்கு தமிழர்கள் கோரிக்கை
வாஷிங்டன்: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு, அமெரிக்க தமிழர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
இலங்கையில் ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவது குறித்து ஹில்லாரி கிளிண்டன் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், உடனடியாக இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவரும், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபான்ட்டும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசு இன்று நிராகரித்து விட்டது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி ஹில்லாரிக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
இந்தக் கோரிக்கையை அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
ஆனால் இதை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் மறுத்துள்ளார்.
இதுகுறித்து உட் கூறுகையில், எங்களின் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கம் உள்ளது. அதே நிலை நீடிக்கும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்க பரிசீலனை நடக்கிறதா என்று எனக்குத் தெரியாது என்றார் அவர்.