ப.சிதம்பரம் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் செயல்: வைகோ
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் சிங்கள ராணுவத்தின் மரண வளையத்துக்குள் ஐந்தரை லட்ëசம் தமிழ் மக்கள் பீரங்கித் தாக்குதலாலும், விமானக் குண்டு வீச் சாலும் பேராபாயத்துக்கு ஆளாகி உள்ளனர்.
மருத்துவ மனைகள் மீதும் குண்டு வீசப்பட்டதில் கடந்த ஒரு வாரத்தில் 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் குழந்தைகள், சிறு வர்கள், தாய்மார்கள் அடங்குவர்.
இலங்கை அரசால் பாதுகாப்புப்பகுதி என்று சொல்லப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் ஜனவரி 27,28 தேதிகளில் மட்டும் 800பேர் கொல்லப்பட்டனர். 3,000 பேர் கடுகாயமுற்றனர்.
அப்பாவித் தமிழ் மக்களையும் சிங்கள ராணுவம் தாக்கிப் படுகொலை செய்யும் கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக மருத்துவ மனைப் பகுதிகளில் எந்தக் குண்டுச் சத்தமும் கேட்கக் கூடாது என்றும், உணவும் மருந்தும் தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் முல்லைத் தீவுப் பகுதிக்குள், தாராளமாகச் செல்ல இலங்கை அரசும், ராணுவமும் அனுமதிக்க வேண்டுமென்றும், அமெரிக்க வெளி விவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளி விவகார அமைச்சர் டேவிட் மெலிபேண்ட்டும் விடுத்த கூட்டறிக்கையில் வற்புறுத்திய பின்னரும் சிங்கள ராணுவம் மருத்து வனைப் பகுதிகளில் குண்டு வீச்சை நிறுத்தவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தினரையும் அனுமதிக்கவில்லை.
உணவும், மருந்தும் தமிழர்களுக்குக் கிடைக்க வில்லை. அமெரிக்க - இங்கிலாந்து அரசுகளின் வேண்டுகோளை ஏற்க முடியாது. ராணுவத் தாக்கு தலை நிறுத்தமாட்டோம் என்று இலங்கை அரசு ஆணவத்தோடு அறிவித்து விட்டது.
போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் வெளியிட்ட அறிக்கையில் இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையும், இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதற்கு முழுமுதற் காரணம் இந்திய அரசுதான்.
ஏனெனில் இலங்கையில் சிங்கள அரசு ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தி விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கூட்டுப் பங்காளிதான் இந்திய அரசாகும்.
அதனால்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் தமிழகமே கொந்தளித்து பல போராட்டங்களை நடத்திய பின்னரும் இந்திய அரசு ஒப்புக்காகக் கூட போர் நிறுத்தம் வேண்டுமென இலங்கை அரசிடம் கூறவே இல்லை.
இந்திய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி போரை நிறுத்தச் சொல்வது எங்கள் வேலை அல்ல என்று தமிழக முதலமைச்சரின் வீட்டு வாசலில் நின்று கொண்டு எகத்தாளமாகச் சொன்னார். அவர் இலங்கைக்குச் சமீபத்தில் சென்ற போதும் போர் நிறுத்தம் கேட்கவே இல்லை.
இதனால், தமிழக மக்களின் மனம் இந்திய அரசுக்கு எதிராக எரிமலையைப் போல கனன்று கொண்டு இருக்கிறது.
எனவே, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக நேற்றைய தினம் டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றும், அதனை அடுத்து சிங்கள அரசும் ராணுவத் தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதைக் கூட இந்திய அரசு, இலங்கை அரசுக்கு வேண்டுகோளாகத் தெரிவிக்கவில்லை.
ஆனால், இந்திய அரசு போர் நிறுத்தம் கேட்டதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை இன்றைய ஏடுகளில் பிரதானச் செய்தியாக ஆக்கப்பட்டுள்ளது. இது மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் முதுகில் குத்துகின்ற பச்சைத் துரோகமாகும் என்று கூறியுள்ளார் வைகோ.