இடைக்கால பட்ஜெட்டும் தேர்தல் தோல்விகளும்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதை அடுத்து காங்கிரஸ் கட்சி இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறு.
இந்த நாடாளுமன்றத்தில் கடைசி கூட்டத் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடரில் 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 18 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த எந்த அரசும் அடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சென்டிமெண்டால் காங்கிரஸார் மத்தியிலும் பீதி நிலவுகிறது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பதவிக் காலம் மே 21ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன் நடைபெறும் தற்போதைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரான இதில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்றுகிறார். அவருடைய உரையில் பல்வேறு தரப்பினருக்கும் மத்திய அரசின் சலுகைகள், அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து 13ம் தேதி இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்வார். 16ம் தேதி நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 2009-10 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். வரிச் சலுகைகளும், சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் மேலும் வட்டிக் குறைப்பு அறிவிப்புகளும் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தமிழர் பிரச்சனை, மும்பை தாக்குதல் உட்பட பல்வேறு விவகாரங்களும் கிளப்பட்டலாம்.
17ம் தேதி தமிழக பட்ஜெட்:
இந் நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே வரும் ஆண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் வரும் 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் அதற்கு அடுத்த நாளான 17ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் குறித்து கடந்த வாரம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூடி விவாதித்தது. பின்னர் நிதியமைச்சர் அன்பழகன் அதிகாரிகளுடன் பட்ஜெட் குறித்து ஆய்வு கூட்டங்களை நடத்தினார்.
மார்ச் மாத இறுதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கலாம் என்று தெரிகிறது.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இலங்கை பிரச்சனை வெடிக்கலாம்.
மேலும் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற தோழமை கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதால், இந்த கூட்டத் தொடரில் மிகக் கடுமையான எதிர்ப்பை ஆளும்கட்சி சந்திக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications