அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை மாயம்!
வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை காணாமல் போனது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் மும்தாஜ் (43). இவருக்கு கடந்த 5ம் தேதி அவரது வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மும்தாஜ் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய தனது குழந்தையுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக சில சோதனைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டதையடுத்து மும்தாஜ் தனது குழந்தையை பெண்கள் வார்டில் அருகில் இருந்தவர்களிடம் பார்த்து கொள்ளும்படி சொல்லி விட்டுவிட்டு சென்றார்.
சோதனைகள் முடிந்து மீண்டும் அங்கு வந்த மும்தாஜ் குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து அழுது புலம்பினார். இது குறித்து மும்தாஜ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அடையாளம் தெரியாத ஒரு பெண் மருத்துவமனைக்கு ஆட்டோவில் வந்து மும்தாஜின் குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மர்மப் பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.