எங்களை தாக்காதீர்கள்: பாகிஸ்தானின் கெஞ்சும் இங்கிலாந்து
அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதையடுத்து அந்நாட்டு அரசு அல் கொய்தா அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து அல் கொய்தா மற்றும் தாலிபான்கள் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் முகாமி்ட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த தயார் செய்து வருகின்றனர்.
மேலும் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த சில பாகிஸ்தானியர்களால் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் ஆபத்து உள்ளதாக சிஐஏ எச்சரித்துள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து அரசு பாகிஸ்தான் டிவிக்களில் தங்களை தாக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் 'கெஞ்சல்' விளம்பரங்களை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விளம்பரங்களில் இங்கிலாந்தின் மிகப் பிரபலமான சில முஸ்லிமகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்த விளம்பரங்கள் பாகிஸ்தானில் உள்ள 15 முதல் 25 வயதுள்ள ஓரளவு படித்த இளைஞர்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தீவிரவாதிகளாக மாறும் வாய்ப்பு அதிகமிருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 30 நிமிடங்கள் ஓடும் மூன்று படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுன இதில் இங்கிலாந்தின் சமுதாய அமைச்சர் சாதி்க் கான், பிர்மிங்ஹாம் மேயர் சவுதாரி அப்துல் ரஷித் மற்றும் வார்ஷிஸ்டையர் அணியின் ஆல்-ரவுண்டர் மோயீன் அலி ஆகியோர் நடித்துள்ளனர்.
சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரங்கள் பாகிஸ்தான் டிவி, ஜியோ டிவி, கைபர் டிவி மற்றும் பாகிஸ்தான் ரேடியோவிலும் ஒளிபரப்பப்படும்.
இங்கிலாந்தில் இருக்கும் 10 பாகிஸ்தானியர்களில் 7 பேர் மிர்பூரை சேர்ந்தவர்கள் என்பதால் மிர்பூர் மற்றும் பெஷாவர் பகுதிகளில் 'நான் மேற்கு' என்ற தலைப்பில் மக்களை நேரிடையாக தொடர்பு கொள்ளும் மூன்று மாத நிகழ்ச்சி ஒன்றையும் இஙகிலாந்து அரசு தயார் செய்துள்ளது என்கிறது கார்டியன்.
இது வெற்றி அடைந்தால் எகிப்து, ஏமன், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இது போன்ற விளம்பரங்களை வெளியிட இங்கிலாந்து உத்தேசித்துள்ளதாம்.