'ஸ்பைஸ்' பங்கு விலை உயர்வு மர்மம்!
மும்பை: ஆசியப் பங்குச் சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக வியாழக்கிழமையும் எதிர்மறையாகவே துவங்கியுள்ளது இந்தியப் பங்குச் சந்தை.
முதல் நிலைப் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தாலும், இரண்டாம் நிலைப் பங்குகள் ஓரளவு தாக்குப் பிடித்து வருகின்றன. உலோகங்கள் மற்றும் சக்தி துறை சார்ந்த பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
வர்த்தகம் துவங்கியதுமே சென்செக்ஸ் குறியீட்டெண் 77 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 22 புள்ளிகள் சரிவு காணப்பட்டது.
வங்கித்துறைப் பங்குகள் சுமாரான லாபத்தில் விற்கப்பட்டாலும், ஐசிஐசிஐ பங்குகள் 1 சதவிகித நஷ்டத்திலேயே கைமாறின.
ஸ்பைஸ் மர்மம்!:
இன்றைய பங்கு வர்த்தகம் டல்லடித்தாலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்கு மட்டும் 40 சதவிகிதம் அதிக விலைக்கு கைமாறி வருகிறது. அது ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ். ரூ.52.55 ஆக இருந்த இந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று ரூ.76-க்கும் அதிக விலைக்குக் கைமாறின. மொத்தம் 57 லட்சம் பங்குகள் இதுவரை இப்படி கைமாறியுள்ளது.
காரணமே இல்லாமல் இப்படி அதிகவிலைக்கு, அதிக அளவு பங்குகள் கைமாறுவதால் செபிக்கு இந்த நிறுவனத்தின் மீது கடும் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இந்த வர்த்தகம், பங்குகள் கைமாறிய விதம் குறித்து விசாரிக்க தனது புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்சைடர் டிரேடிங் மூலம் விலையை இந்த நிறுவனம் ஏற்றுவிட்டு வருகிறதா என்ற விசாரணை நடக்கிறது.