நயாகரா விமான விபத்து-'ஆட்டோ பைலட்' காரணம்?
டேக் ஆப் செய்யும்போதும், தரையிறங்கும்போதும் விமானங்களை விமானிகள் தான் இயக்க வேண்டும். நீண்டதூரம் பயணிக்கும்போது மட்டும் தான் ஆட்டோ பைலட்டை நாடலாம்.
ஆனால், இந்த விமானம் தரையிங்கும்போது ஆட்டோ பைலட்டில் இயங்கியது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய அந்த காண்டினன்டல் ஏர்லைன்ஸ் (Continental Airlines Flight 3407) விமானம் 60 பயணிகளுடன் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரிலிருந்து நயாகரா நீர்விழ்ச்சி அருகே உள்ள பஃபலோ விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது.
விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் க்ளியரன்ஸ் சென்டர் என்ற புறநகரில் வீடுகளின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.
இது குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் இந்த விமானம் தரையிறங்கும்போதே ஆட்டோ பைலட்டால் இயங்கியது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரியான ஸ்டீவன் சீலேண்டர் கூறியுள்ளார்.
முதலில் இந்த விமானத்தில் பனி படர்ந்ததாகவும், இதனால் அதன் என்ஜின்கள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விமானம் கிளம்பிய 11 நிமிடத்திலேயே ஐஸ்ஸை உருக்கும் சிஸ்டம் தானாகவே செயல்பட ஆரம்பித்துவிட்டதாகவும், விமானம் விபத்துக்குள்ளாகும் வரை இந்த சிஸ்டம் இயங்கியதாகவும் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.
தரையிறங்கிக் கொண்டிருந்த இந்த விமானம் 5 விநாடிகளில் 800 அடி அளவுக்கு உயரம் குறைந்ததாகவும் (கிட்டத்தட்ட வானிலிருந்து விழுந்துள்ளது), அதன் பின்னர் வானில் பல முறை டைவ் அடித்து பறந்து கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் தரையில் வந்து விழுந்து சிதறியுள்ளது என்றார்.
விபத்துக்குள்ளான அந்த விமானம் 74 இருக்கைகள் கொண்ட பம்பார்டியர் (Bombardier Dash 8 Q400) ரகத்சைச் சேர்ந்தது.