உயர்நீதிமன்றம் பிப். 25 வரை மூடப்பட்டிருக்கும்
சென்னை: சென்னை உயர்நீதி மன்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல்களும் போலீசாரும் கடந்த 19ம் தேதி மோதிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்கவுள்ளது.
இதையடுத்து கடந்த 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஜூடிசியல் அகாடமியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முழு பெஞ்ச் கூட்டம் நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையில் நீதிபதிகள் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுத்தது.
அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில்,
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை நீதிமன்றம், தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அனைத்தும் வரும் 23, 24ம் தேதிகளில் மூடப்பட்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.