பிரதமர் பதவி: கடும் போட்டியில் சோனியா-அத்வானி: கருத்துக் கணிப்பு
டெல்லி: சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு சோனியா காந்தி மற்றும் அத்வானிக்கு இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
சிஎன்என் - ஐபிஎன் தொலைக்காட்சி லோக்சபா தேர்தல் வருவதையொட்டி கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறது. இத் தொலைக்காட்சிக்காக புகழ் பெற்ற சிஎஸ்டிஎஸ் நிறுவனமும் இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றன.
மாநில வாரியாக யாருக்கு எந்த அளவில் ஆதரவு உள்ளது. எந்தக் கூட்டணி எத்தனை சீட்களை வெல்லும் என்பது குறித்த முடிவுகளை அது அறிவித்து வருகிறது.
இந் நிலையில் பிரதமர் பதவிக்கு யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு சோனியா மற்றும் அத்வானி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மொத்தம் 23 மாநிலங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் ஆதரவாளர்களிடம், யாரை பிரதமர் பதவிக்கு ஆதரிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
அப்போது சோனியா காந்திக்கு ஆதரவாக 46 சதவீதம் பேரும், மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக 23 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் பதவியை ஏற்கனவே சோனியா காந்தி நிராகரித்து விட்டு மன்மோகன் சிங்கை அப்பதவியில் அமர்த்தினார். இருப்பினும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் சோனியா காந்திக்கே தொடர்ந்து பெரும்பான்மையான ஆதரவு உள்ளது.
பாஜகவை பொறுத்தவரை பிரதமர் பதவிக்கு வரக் கூடிய தகுதி படைத்தவர் என கட்சியில் ஒரு பிரிவினரால் கூறப்பட்டு வரும் நரேந்திர மோடிக்கு 3வது இடமே கிடைத்துள்ளது.
பாஜக ஆதரவார்களில் 10 சதவீதம் பேரே மோடியை ஆதரித்துள்ளனர். 2வது இடத்தில் இருக்கிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 27 சதவீதமாகும்.
பாஜகவினரில் 31 சதவீத ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் அத்வானி.
இதில் விசேஷம் என்னவென்றால் இதற்கு முன்பு நடந்த பல்வேறு கருத்துக் கணிப்புகளில் பிரதமர் பதவிக்கு வாஜ்பாயைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்திருந்தனர் மக்கள். ஆனால் முதல் முறையாக அத்வானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். வாஜ்பாயின் உடல் நலனையும் கருத்துத் தெரிவித்தவர்கள் கருத்தில் கொண்டிருப்பார்கள் என கருதப்படுகிறது.
இந்த முடிவின் மூலம் பாஜகவில் வாஜ்பாயின் சகாப்தம் முடிவுக்கு வரத் தொடங்கி விட்டது தெரிய வருகிறது.
வரும் தேர்தலைப் பொறுத்தவரை நரேந்திர மோடிக்கோ அல்லது ராகுல் காந்திக்கோ பிரதமர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு அவரவர் கட்சிக்குள்ளேயே அதிக ஆதரவில்லை. அதேசமயம், 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்த இருவரும் நிச்சயம் தத்தமது கட்சிகளில் முதலிடத்தைப் பிடிக்க பிரகாசமாக வாய்ப்புக்கள் உள்ளன.