மாயாவதி ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்பு-தீரன்
ஆரணி: இந்திய நதிகளை இணைக்கும் சக்தி மாயாவதியிடம் தான் இருக்கிறது. அவர் பிரதமராக வந்தால் இது எளிதில் நிறைவேறும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தீரன் தெரிவித்துள்ளார்.
ஆரணியில் நடந்த கட்சி பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த தேர்தலுக்கு முன் அனைத்து விவசாயிகளுக்கும் 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள். ஆனால் அரை ஏக்கர் மட்டுமே தந்துள்ளனர். ஆனால், சிலருக்கு அதுவும் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டு முடிவில் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், உபியில் மாயாவதி கடந்த ஓராண்டில் மட்டும் விவசாயிகளுக்கு தலா 3 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளார். அவர் இதுவரை மொத்தம் 7.5 லட்சம் ஏக்கர்களை வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும்.
மாயாவதி அனைவருக்கும் ஆட்சியில் பங்கு, அனைத்து சமுதாயத்துக்கும் அதிகாரம் வழங்கி வருகிறார். இதனால் தான் அங்கு அவரால் நான்காவது முறையாக முதல்வராக வர முடிந்தது. அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் இந்திய நதிகளை அனைத்தையும் இணைத்துவிடுவார். அதை அவரால் மட்டுமே எளிதாக செய்ய முடியும்.
மொத்த வேலைவாய்ப்பில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்கு 12 சதவீதம் தான். மீதமுள்ள 88 சதவீத வேலைகளை தனியார் நிறுவனங்கள் தான் வழங்கி வருகின்றன. இதனால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்கள் முழுமையான முன்னேற்றம் காண்பார்கள்.
சுவீஸ் வங்கியில் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமாத்துறையினர் மற்றும் விளையாட்டு வீரர்களின் கருப்புப் பணம் ரூ.64 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இந்த பணத்தை அரசு வசம் கொண்டுவந்தால் இந்திய நதிகளை இணைக்கலாம், கிராமங்களுக்கு மின்வசதி, சாலை வசதி செய்யலாம், அனைவருக்கும் மருத்துவ வசதி, சுகாதார வசதி கொடுக்கலாம். ஏன் உலகத்துக்கே சோறு போடலாம்.
ஆரணி பகுதியில் பட்டு தொழில் அதிகம். இவர்களின் வருமானத்தை அதிகப்படுத்த எங்களிடம் திட்டம் உள்ளது என்றார் தீரன்.












Click it and Unblock the Notifications