தீக்குளித்து இறந்த திமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி
விருதுநகர்: விருதுநகரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட திமுக தொண்டரின் குடும்பத்திற்கு ரூ. 1லட்சம் நிதியை திமுக அறிவித்து அதை குடும்பத்தினரிடம் வழங்கியது.
சிவகாசி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் கோகுல்ரத்தினம் (44). தி.மு.க. தொண்டரான இவர் இன்று மதியம் விருதுநகர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் மண்ணெண்ணையை வைத்திருந்தார்.
உள்ளே வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீப்பற்றிய உடலுடன் தி.மு.க. கொடியை பிடித்தபடி ஓடி வந்தார்.
அப்போது அந்தப் பகுதி வழியாக ரோந்து வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்து கோகுல்ரத்தினத்தை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் உடல் முழுவதும் கருகிப் போன கோகுல் ரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோகுல் ரத்தினம் கொண்டு வந்த துணிப்பையை மீட்ட போலீஸார் அதில் ரேஷன் கார்டு மற்றும் ஒரு கடிதத்தை மீட்டனர்.
அந்தக் கடிதத்தில், டாக்டர் கலைஞர் நலமுடன் இருக்க வேண்டும். பூரண குணமடைந்து அவர் மீண்டும் பணியை தொடங்க வேண்டும். இலங்கையில் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த 9வது தமிழர் கோகுல்ரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று விருதுநகருக்கு விரைந்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கோகுலரத்தினம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திமுக சார்பில் ரூ 1 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.