பனி மூட்டம்- விமானங்கள் தாமதம், பஸ்கள் மோதல்
கோடைக் காலம் முன்பே தொடங்கி வெயில் வாட்டத் தொடங்கிவிட்டாலும் அதிகாலை நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இந் நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் திருச்சியில் கடும் பனி மூட்டம் நிலவியது.
இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்களைக் கூட காண இயலாத நிலை நிலவியது.
இந்த பனி மூட்டத்துக்கு திருச்சி விமான நிலைய பகுதியும் தப்பவில்லை. கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானம் விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது கடும் பனி மூட்டம் நிலவியது.
இந் நிலையில் விமானத்தில் ஒரு பறவை மோதியது. விமான என்ஜினில் பறவையின் இறக்கைகள் சிக்கி கொண்டன, இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
சென்னையில் கடும் பனி மூட்டம்:
இந் நிலையில் இன்று காலை சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
எதிரில் நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் அதிகம் இருந்தது. காலை ஏழரை மணிக்கு பிறகுதான் பனி மெல்ல மெல்ல விலகியது. எட்டு மணியளவில்தான் நிலைமை சகஜமானது.
இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதே போல பனிமூட்ட காரணமாக காலை குவைத்தில் இருந்து வந்த குவைத் ஏர்லைன்ஸ் விமானமும், கொழும்பில் இருந்து வந்த ஜெட் லைட் விமானமும் பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியவில்லை. இதனால் அவை பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
மேலும் சார்ஜாவில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
அதே போல காலையில் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன. கொல்கத்தாவிலும் இதே நிலை நிலவியது.
தூத்துக்குடியி்ல் பஸ்கள் மோதல்:
தூத்துக்குடியில் கடும் பனி மூட்டத்தால் இரு பேருந்துகள் மோதிக் கொண்டன. இதில் நான்கு பெண்கள் காயமடைந்தனர்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் பூ நிறுவனத்தில் ஏரல், சிவகளை, பெருங்குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை நிறுவன பஸ்களில் அழைத்து செல்வது வழக்கம். வழக்கம்போல் காலை 7.30 மணிக்கு சிவகிளையில் பெண்களை ஏற்றிக் கொண்ட பஸ் பெருங்குளம் குளத்தின் கரை வழியாக சென்றது.
அதிகாலையில் பனி மூட்டமாக இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு பஸ் குளத்தின் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.
பணி மூட்டம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது இந்த பஸ் மோதியது. இதில் நான்கு பெண்கள் காயமடைத்தனர். அவர்கள் நெல்லை, ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை-திருச்சி சாலையில்...
கடலூர்- விழுப்புரம் மாவட்டங்களிலும் அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருந்ததால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெரும்பாலான பஸ், லாரிகளை டிரைவர்கள் சாலையோரமாக நிறுத்திவிட்டனர்.
8 மணிக்குப் பிறகு தான் மீண்டும் ஓட்டிச் சென்றனர்.