வக்கீல்களை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற முன்னாள் போலீஸார்
நெல்லை: நெல்லையில் வக்கீல்கள் உண்ணாவிரதத்தின் போது காவல்துறையினரின் குடும்பத்தினரையும் பெண்களையும் அவமதிக்கும் விதமாக பேசியதை கண்டித்து, முன்னாள் போலீசார் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அதற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் இன்று போலீசாருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க போவதாக சாந்திநகர் காவலர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் அதன் செயலாளர் நாராயணசாமி என்பவர் அறிவித்திருந்தார்.
இதற்கு அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் பெண்கள் ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து சாந்தி நகர் காவலர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சென்று அவர்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதியளிக்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சாந்திநகர் காவலர் குடியிருப்போர் நலசங்க செயலாளர் நாராயணசாமி கூறுகையில்,
நான் காவல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். நெல்லையி்ல் நேற்று உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் காவலர்களையும், அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களையும் இழிவாக பேசியுள்ளனர்.
இது எங்களை கொதிப்படைய செய்தது. இதை தட்டி கேட்பதற்கு யாரும் முன்வரவில்லை. எனவே நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தேன். இருப்பினும் ஜனாநாயாக முறையில் போராட முடிவு செய்தோம்.
மாநில அளவில் ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்த உள்ளேன். நான் வக்கீல்களுக்கு எதிரி அல்ல. அவர்கள் பேசியதை நான் எதிர்க்கிறேன் என்றார்.