'சரண்டரான' 12 பஞ்சாயத்து தலைவர்களின் கார்கள்
தூத்துக்குடி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் 12 பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கார் சாவிகள் பெறப்பட்டு கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் காரில் இருந்து தேசிய கொடியும் அகற்றப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தி்ல் அரசு கார்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அதனை ஒப்படைக்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரகாஷ் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் கஸ்தூரி தங்கம் கமிஷனர் லட்சுமியிடம் கார் சாவியை ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, மாவட்ட பஞ்சாயத்து செயலாளரிடம் சாவியை ஒப்படைத்தார்.
இது தவிர 12 பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் அந்தந்த யூனியன் பிடிஓக்களிடமும், கோவில்பட்டி பஞ்சாயத் தலைவர் கோவில்பட்டி நகராட்சி கமிஷனரிடமும் கார் சாவியை ஓப்படைத்தனர். இந்த சாவிகள் அனைத்தும் கலெக்டரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து அமைச்சர்களின் கார்களில் தேசிய கொடி அகற்றப்பட்டது. தூத்துக்குடிக்கு நேற்று முன்தினம் விமானம் மூலம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வந்தார். வரும்போது அவர் காரில் தேசிய கொடி பறந்தது.
சென்னையில் நடக்கும் சமூக நலத்துறை ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் முலம் சென்னை சென்றார். அப்போது அவரது காரில் தேசிய கொடி அகற்றப்பட்டு, திமுக கட்சி கொடி பறந்தது.