இலங்கை அணி மீதான தாக்குதல்-இந்தியாவுக்கு தொடர்பாம்: சொல்கிறது பாக்
லாகூர்: லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதுகுறித்து லாகூர் காவல்துறை ஆணையர் குஷ்ரூ பெர்வைஸ் கூறுகையில், இலங்கை அணியினரை பத்திரமாக பாதுகாப்புப் படையினர் காப்பாற்றி விட்டனர் என்றார்.
முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஹமீத் குல் கூறுகையில், பாகிஸ்தானைப் பலவீனப்படுத்த இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க இந்தியா முயன்று வருகிறது. எனவே இலங்கை அணியினர் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவின் சதித் திட்டமும் இதில் அடங்கியிருக்கலாம் என்றார்.
இதற்கிடையே, லாகூர் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
இந்த கொடும் குற்றத்தை இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற தீவிரவாத செயல்கள் தொடரத்தான் செய்யும்.
இந்த நேரத்தில் சர்வதேச சமுதாயத்தை குழப்பும், திசை திருப்பும் வேலைகளில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது. மாறாக, இந்தியாவுடன் இணைந்து தீவிரவாத கட்டமைப்புகளை தூள் தூளாக்க முன்வர வேண்டும். சதிகார்ரகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றார்.